உங்கள் நாடுகளில் மின் வயர்கள் தான் பதுங்கு குழியில்
எங்கள் நாட்டில் உயிர்கள் மட்டும் தான் பதுங்கு குழியில்......
சாதிக்கும் சாப்பாட்டுக்கும் சண்டை உங்கள் நாட்டில்...சமாதானத்திற்கு சண்டை எங்கள் நாட்டில்....
நாடு மட்டும் வெவ்வேறு
நாமெல்லாம் ஓரினம்
மூத்த குடி முத்தமிழ்க் குடி
மூலை முடுக்கெல்லாம் முத்தமிழின் சுவடி....
உரிமைக்கும் உடைமைக்கும் போராடிக்கொண்டிருக்கிறோம் அங்கே உயிருக்கே போராடிக் கொண்டிருக்கிறது நம் இளம்..
சொத்துக்கும்
சுகத்திற்குமான போராட்டமல்ல
சுதந்திரத்திற்கான போராட்டம்
நிம்மதியைத் தேடி போராட்டம்
நிர்க்கதியாக நின்று போராட்டம்
அநீதியை எதிர்த்து போராட்டம்
அமைதியைத் தேடி பெருங்கூட்டம்
அகதி என்ற பெயரில் எங்கெங்கோ ஓட்டம்
பிறந்த மண்ணில் ஒரு கைப்பிடி மீண்டும் கைப்பிடிப்போமா
ஆறடி மண்ணில் என் ஆவியை முடிப்போமா....
ஓரடி பதிக்க முடியவில்லை
ஓட ஓட விரட்டுவதும்
ஏனோ... உழைத்து வாழ என்னும் எம்மை வதைத்து வாழ்வதும் ஏனோ
அமைதிப் பூங்காவாக வேண்டும் அதில் அழகிய பூவாக எங்கள் தலைமுறை மலர்ந்து மணம் வீச வேண்டும்......
மண்மீது விளையாடக் ஆசை ஆனால் மண்ணுக்குள் புதைகிறோம் உன் பேராசை
குடியிருக்க குடிசை இருக்க குழாய்க்குள் குடித்தனம்
குடிவந்த உயிர் பயம்...
கொத்துக் கொத்தாய் மடிகிறோம் வெத்து உடலாய் புதைகிறோம்
உயிர் வித்தை கையில் பிடித்து பித்துப்பிடித்து அலைகிறோம்
குழி தோண்டி புதைக்க வேண்டிய அவசியமில்லை குழிக்குள் தானே வந்துவிழுகிறது ஏவுகணை
பிரேத பரிசோதனை தேவையுமில்லை பிரேதம் ஆவதே பெரும் சோதனை
தினம் தினம் தீபாவளி என்று தீருமோ எங்கள் வலி......
நீங்களும் எங்களவனாக வேண்டாம்.. நாங்களும் உங்களவனாக வேண்டாம்
முளையிலேயே கிள்ளி எறி இல்லை உன் மூளை மழுங்கும் உண்மை அறி
இடியும் மின்னலும் ஓயாமல்... இரு விழிகளில் கண்ணீர் மழை தீராமல்...
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகுமாம் வாய்விட்டு அழக் கூட முடியவில்லை அதிரும்
அணுகுண்டு சத்தம்....
யுத்தம் நித்தம் வெடிச்சத்தம்
கண்ணீரும் கதறலும் ஆனது மொத்தம்
எப்போது எது வந்து துளைக்கும் தெரியாது எதுவரை உயிர் நிலைக்கும் அதுவும் புரியாது
வெளியில் சென்றால் விரையம் எங்கள் விழிகளுக்கு என்று உதயம்...
பொன்னுக்கும் பொருளுக்கும் பதவிக்கும் அடித்துக்கொள்ளும் மானிடனே எங்கள் அவலநிலை காணீரோ......
தாய் மண்ணுக்காக போராட்டம் சேய் மண் மீது போராட்டம்...
எடுத்துப் போக ஏதும் இல்லை கொடுத்து போவோம் இன்னுயிரை...
மண்ணுயிர் காக்க..மரபினை மீட்க
களை பறிப்போமே
களைப்பறியாமலே......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114